by Vignesh Perumal on | 2025-05-11 10:18 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வெள்ளைய ஞானியார் சிவன் கோவிலில் சித்திரை மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சித்திரை பௌர்ணமிக்கு முன்னதாக வரும் சனி பிரதோஷம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி, இன்று (மே 11) சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளைய ஞானியார் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோவிலில் மூலவர் சிவனுக்கும், நந்தி தேவருக்கும் கைலாய சங்கு முழங்கவும், மேள தாளங்கள் இசைக்கப்படவும் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு விரதமிருந்த ஏராளமான பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட்டனர்.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரும் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தி மயமாக காட்சியளித்தது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.