by Vignesh Perumal on | 2025-05-04 03:58 PM
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (வயது 17), நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதிய கயல்விழி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இதற்கிடையே, இன்று (மே 4, 2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
வழக்கம் போல் நேற்று இரவு தனது படுக்கை அறைக்குச் சென்ற கயல்விழி, இன்று காலை தாம்பரத்தில் நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரது தாயார் அதிகாலை 4 மணிக்கு அவரை எழுப்பச் சென்றார். அப்போது கயல்விழி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கயல்விழி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தேர்வு பயத்தின் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்பது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அகிலி கிராமத்தில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் கவலையை அளிப்பதாக உள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!