by Muthukamatchi on | 2025-04-30 07:18 PM
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 5.40 கோடி ஒதுக்கீடு. எம்எல்ஏ. மகாராஜன் தலைமையில் பூமி பூஜை .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிக்கு பூமி பூஜை எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் நடந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் மதுரை - தேனி நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததால், கட்டிடங்கள் ஆங்காங்கே பெயர்ந்து சேதம் அடைந்து காணப்பட்டது. இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டிடத்தை அகற்றி அந்த இடத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாயின் திட்டக் கூறு திட்டத்தின் (எஸ்சிபிஏஆர் ) கீழ் ரூ.5.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இந்த கட்டிடத்தில் தரைத்தளம், முதல் தளம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, கணினி அறை, அலுவலகப் பணியாளர்கள் அறை, ஆவணங்கள் வைப்பு அறை, ஓய்வு அறை, ஆண், பெண் கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அமைய உள்ளது. இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை ஒராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூமி பூஜை விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போஸ், சரவணன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் ,பணியாளர்கள் உள்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.