by Vignesh Perumal on | 2025-04-28 02:51 PM
தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமியை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2006-2010 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரை விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமைச்சர் ஐ. பெரியசாமி, 2006 முதல் 2010 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.01 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமியை திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்தது. இந்த விடுவிப்பு உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திண்டுக்கல் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து இன்று (ஏப்ரல் 28, 2025) தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில், திண்டுக்கல் நீதிமன்றம் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும், போதுமான ஆதாரங்களை கருத்தில் கொள்ளாமல் விடுவிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின் மூலம், அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.