by Vignesh Perumal on | 2025-04-27 04:59 PM
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையாக, 10 பயங்கரவாதிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இந்த நடவடிக்கை பயங்கரவாத அமைப்புகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
கள நிலவர தகவல்களின்படி, லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற முக்கிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகளின் வீடுகள் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகள் இடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியல் பின்வருமாறு:
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்:
அடில் ஹுசைன் தோகெர்
ஸாகிர் அஹ்மத் கானாய்
ஆமிர் அஹ்மத் தார்
ஆசிஃப் ஷேக்
ஷாஹித் அஹ்மத் குட்டே
ஆஹ்சன் உல் ஹக் ஆமிர்
ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள்:
ஆமிர் நஸீர் வானி
ஜமீல் அஹ்மத் ஷேர் கோஜ்ரி
போராளிகள் முன்னணி (தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்:
அத்னான் சஃபி தார்
ஃபரூக் அஹ்மத் தெத்வா
இந்த பயங்கரவாதிகள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அல்லது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட இந்த வீடுகள், பாதுகாப்புப் படையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு துணை போகும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது இடிக்கப்படும். இது பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களது தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதி" என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கையானது அப்பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் செல்வாக்கை குறைக்கும் என்றும், பொதுமக்களிடையே பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.