by Vignesh Perumal on | 2025-04-16 10:38 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (15.04.2025) நடந்துள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது 55) என்பவர் நவமரத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் வழி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
சங்கிலியை பறித்ததில் பாப்பாத்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து பாப்பாத்தி வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.