by Vignesh Perumal on | 2025-04-15 01:34 PM
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வளாகத்தில் இன்று (ஏப்ரல் 15, 2025) காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். இந்த தாக்குதலில் மாணவனின் தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவத்தை தடுக்க முயன்ற ஆசிரியர் ஒருவருக்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவனையும் ஆசிரியரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, இரு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பென்சில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே இந்த வன்முறைக்கு காரணம் என்று தெரிய வருகிறது. ஒரு மாணவன் மற்றொரு மாணவனிடம் பென்சில் கேட்டதாகவும், அதை அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற பெண் ஆசிரியர் ஒருவருக்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. அவரது காயமும் லேசானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அரிவாளால் வெட்டிய மாணவனை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மாணவன் எப்படி பள்ளிக்கு அரிவாளை கொண்டு வந்தான் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் இத்தகைய வன்முறை நிகழ்ந்தது குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.