by Vignesh Perumal on | 2025-04-15 12:42 PM
திண்டுக்கல் முருகபவனம் அருகே இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ரகுவரன் (வயது 35) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பழனி ரோடு பகுதியில் பழைய டயர் கடை நடத்தி வந்துள்ளார்.
மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரகுவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகுவரன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் ரீதியாக ஏதும் பிரச்சினைகள் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.