by Vignesh Perumal on | 2025-04-12 12:14 PM
கோவையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா மற்றும் விபின் ஆவர். இவர்கள் அனைவரும் கோவையைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் கேரள மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம், 12 செல்போன்கள், 2 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூதாட்ட கும்பலுக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா, எவ்வளவு காலமாக இவர்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.