by Vignesh Perumal on | 2025-04-11 02:08 PM
மாற்றுத்திறனாளிகள் குறித்து தான் பேசியதுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதை மாற்றி, கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" என்று முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டினார். நாங்களும் அதையே பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரைக் கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த அளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, துரைமுருகன் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பவர்களின் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டமும் நடத்தப்பட்டது. தங்களது கண்டனத்தை பதிவு செய்ததோடு, அமைச்சர் துரைமுருகன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில்தான் அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.