by Vignesh Perumal on | 2025-04-09 10:39 AM
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழின்பால் பற்றுக்கொண்ட இலக்கியச் செல்வருமான அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன்.
குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் குமரி அனந்தன் அவர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி பெருமை கொண்டோம். விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!