| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

வீட்டில் மான் கொம்பு...! 72 வயது முதியவர் கைது...! வனத்துறை அதிரடி நடவடிக்கை...!

by Vignesh Perumal on | 2026-05-14 12:09 PM

Share:


வீட்டில் மான் கொம்பு...! 72 வயது முதியவர் கைது...! வனத்துறை அதிரடி நடவடிக்கை...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, உரிய அனுமதியின்றி வீட்டில் மான் கொம்பு வைத்திருந்த முதியவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, சட்டத்திற்குப் புறம்பாக வீட்டில் மான் கொம்பு வைத்திருந்த முதியவரை வனத்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து ஒற்றை மான் கொம்பைப் பறிமுதல் செய்தனர்.

பழனியை அடுத்த பெருமாள்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைகவுண்டர் (72). இவரது வீட்டில் பழமையான மான் கொம்பு ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் பிச்சைகவுண்டரின் வீட்டிற்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, அவரது வீட்டில் ஒரு கடமான் ஒற்றை கொம்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து பிச்சைகவுண்டரிடம் நடத்திய விசாரணையில், அந்த மான் கொம்பு தனது முன்னோர்கள் காலத்திலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், உரிய அனுமதி இன்றி வனவிலங்கு உறுப்புகளை வைத்திருப்பது குற்றம் என்பதால், வனத்துறையினர் அந்த மான் கொம்பைப் பறிமுதல் செய்து, பிச்சைகவுண்டரைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: "இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, மான் கொம்பு உள்ளிட்ட வனவிலங்குகளின் பாகங்களை அனுமதியின்றி வீட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னோர்கள் காலத்திலிருந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றைச் சட்டப்பூர்வமாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், சென்னை வனத்துறை உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாத பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."

வீடுகளில் அலங்காரத்திற்காகவோ அல்லது பாரம்பரியமாகவோ வனவிலங்கு பாகங்களை வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது உரிய உரிமம் பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 72 வயது முதியவர் மான் கொம்பு வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment