by Vignesh Perumal on | 2026-04-27 09:03 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (44). தொழிலாளியான இவர், கடந்த சனிக்கிழமை பழனி பாலசமுத்திரம் சாலை, வரட்டாற்று பாலம் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இது குறித்துத் தகவலறிந்த பழனி தாலுகா போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவின் பேரில், பழனி டி.எஸ்.பி (DSP) தனஞ்செயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டும் வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20) மற்றும் சங்கிலித்துரை (27) ஆகிய மூவருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று முருகன் மற்றும் அந்த இளைஞர்களுக்கு இடையே மது அருந்தும் போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் முருகனைத் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!
சாத்தான்குளம் கொலை வழக்கு : சிபிஐ முறையீடு ! கோர்ட் உத்தரவு !!
10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...! புதிய அறிவிப்பு வெளியீடு...!
தேர்தலுக்குப் பின்...! கொடைக்கானல் பயணம்..! சென்டிமென்ட் கூஸ்பம்...!
பெரும் சோகம்...! மறைந்த டிஎஸ்பி...! கலெக்டர் எஸ்பி மரியாதை..!