by Vignesh Perumal on | 2026-04-09 02:40 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கதவை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், 60 பவுன் தங்க நகை மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம் நடந்துள்ளது.
தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, ஒட்டன்சத்திரம் அருகே இவ்வளவு பெரிய கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் அடுத்த நல்லாகவுண்டனூரைச் சேர்ந்த காளிமுத்து (75) இவர் மின்வாரியத்தில் (TNEB) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
காளிமுத்து தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர். நகைகளைத் திருடியதுடன் நில்லாமல், வீட்டின் போர்டிகோ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளிமுத்துவின் காரையும் அந்த மர்ம கும்பல் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
இன்று காலை வீடு திரும்பிய காளிமுத்து, கதவு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் கார் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஒட்டன்சத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்குத் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கொள்ளை நடந்த விதம் குறித்துப் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டறிந்து, விசாரணையை முடுக்கிவிட்டார்.
மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டின் கதவு மற்றும் பீரோவில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைத் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் திருடிச் சென்ற கார் எந்த திசையில் சென்றது என்பதைக் கண்டறிய, ஒட்டன்சத்திரம் மற்றும் தாராபுரம் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வளவு பெரிய அளவில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சென்ற தகவலை அறிந்த நெருக்கமானவர்களே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? அல்லது பழைய குற்றவாளிகளின் கைவரிசையா? என்ற கோணத்தில் ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மேலாடை அணியாததால் பரபரப்பு ! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் !! இளைஞன் உருக்கம் !!!
ரேஷன் கார்டு - புதிய மாற்றங்கள் என்னென்ன.? அவசியம் தெரிஞ்சுக்கோங்க. !
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்...! 60 பவுன் நகை, கார்...! எஸ்.பி. அதிரடி விசாரணை..!
திமுக-வை வீட்டுக்கு...! சசிகலா ஆவேசப் பேச்சு...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!
தேனி கூடலூர் திரிசூல காளியம்மன் கோயிலில் பங்குனி பெருவிழா கோலாகலம் ★ முளைப்பாரி, பால்குடம் எடுத்து வழிபாடு