| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பழனியில் பயங்கரம்...! விவசாயி அடித்துக் கொலை...! தந்தை, மகன் உட்பட 3 பேர் அதிரடி கைது...!

by Vignesh Perumal on | 2026-03-19 02:46 PM

Share:


பழனியில் பயங்கரம்...! விவசாயி அடித்துக் கொலை...! தந்தை, மகன் உட்பட 3 பேர் அதிரடி கைது...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மின்வாரியத்திற்குப் புகார் அளித்த ஆத்திரத்தில் விவசாயி ஒருவரை அடித்துக் கொலை செய்த தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூர் அருகே உள்ள மேல்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). விவசாயியான இவரது தோட்டத்திற்கு அருகிலேயே மகாலிங்கம் என்பவரது தோட்டமும் அமைந்துள்ளது. மகாலிங்கம் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு வழங்கப்பட்டுள்ள 'இலவச விவசாய மின்சாரத்தை' பயன்படுத்தி, கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வெளியில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

விவசாய மின்சாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து வடிவேல், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், விதிமீறல் உறுதி செய்யப்பட்டதையடுத்து மகாலிங்கத்திற்குப் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளனர். இதனால் மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் வடிவேல் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஆத்திரமடைந்த மகாலிங்கம், அவரது மகன் அருண் மற்றும் அவர்களது உறவினர் முத்துக்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து வடிவேலிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கட்டை மற்றும் ஆயுதங்களால் வடிவேலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வடிவேல், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தலைமறைவாக முயன்ற மகாலிங்கம், அவரது மகன் அருண் மற்றும் முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் சில மணி நேரங்களிலேயே சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

உயிரிழந்த வடிவேலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள கீரனூர் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அற்பக் காரணத்திற்காக விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment