by Vignesh Perumal on | 2026-01-14 12:14 PM
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே போதை ஆசாமிகளின் தகராறை விலக்கி விட முயன்ற வாலிபரை, பீர் பாட்டிலால் சரமாரியாகத் தாக்கிய இருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள AMC ரோடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இந்த டாஸ்மாக் கடை அருகே பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயராகவன் (29) மற்றும் பூபாலன் (30) ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபாசமாகப் பேசிக்கொண்டு மல்லுக்கட்டியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் அந்த வழியாக வந்துள்ளார். சாலையில் இருவர் மோதிக்கொள்வதைப் பார்த்த அவர், மனிதாபிமான அடிப்படையில் சண்டையை நிறுத்தும்படி கூறி அவர்களை விலக்கி விட்டுள்ளார். தங்கள் சண்டையில் தலையிட்டதால் ஆத்திரமடைந்த விஜயராகவனும், பூபாலனும் பிரேம்குமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்பாராத விதமாக, அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பிரேம்குமாரைச் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த பிரேம்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற விஜயராகவன் மற்றும் பூபாலன் ஆகிய இருவரையும் போலீசார் விரட்டிப் பிடித்தனர். அவர்கள் மீது வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான இருவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையப் பகுதியில், பட்டப்பகலில் தகராறை விலக்க வந்தவரை போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!