| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

திண்டுக்கல் அருகே பெரும் சோகம்...! 2 விவசாயிகள் துடிதுடித்து உயிரிழப்பு...!

by Vignesh Perumal on | 2026-01-13 06:35 PM

Share:


திண்டுக்கல் அருகே பெரும் சோகம்...! 2 விவசாயிகள் துடிதுடித்து உயிரிழப்பு...!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் அருகே உள்ள வாகரை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொருளூர், வெறுவாடிநாயக்கன் வலசு பகுதியைச் சேர்ந்த பழனியப்ப கவுண்டர் மகன் வேலுச்சாமி (62) மற்றும் தேவத்தூர், பில்லாகாட்டுவலசு பகுதியைச் சேர்ந்த காளிச்சாமி மகன் கருப்பசாமி (62) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கள்ளிமந்தயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வாகரை பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

கார் மோதிய வேகத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமி மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருமே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றினர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் திண்டுக்கல் பாரதிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரைக் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர்.

ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமங்களில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் நிகழ்ந்த இந்த விபத்து கிராம மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment