by Vignesh Perumal on | 2026-01-05 04:45 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் இணைந்துவிடுவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இது குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இவர்கள் இருவரும் தவெக பக்கம் செல்வதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்பவில்லை என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே (NDA) தக்கவைத்துக் கொள்வதையே அமித் ஷா தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார்.
இதற்காக பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தாலும், இரு தலைவர்களும் இன்னும் தங்களின் இறுதி முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
பாஜகவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
"அமமுக இடம்பெறும் கூட்டணியில் ஆண்டிபட்டி தொகுதியை எமக்கே ஒதுக்க வேண்டும்; தேவைப்பட்டால் நானே அங்கு போட்டியிடுவேன்" என டிடிவி தினகரன் அதிரடியாகப் பேசியுள்ளார்.
திருச்சி கூட்டத்தில், முசிறி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரை அறிவித்து தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். "நாங்கள் 50 தொகுதிகள் அல்லது 80 தொகுதிகள் வேண்டும் என அடம்பிடிக்க மாட்டோம். எங்களின் பலத்தையும் எதார்த்தத்தையும் புரிந்து கொண்டு தொகுதிகளைப் பெறுவோம்" என தினகரன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய சூழலில், டிடிவி தினகரன் அறிவித்துள்ள தொகுதிகளை மறுப்பு ஏதுமின்றி ஒதுக்கத் தயாராக இருக்கும் ஒரே கட்சியாக தவெக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அமித் ஷா தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டால், "நாங்கள் ஏற்கனவே அறிவித்த தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி" என்கிற கடுமையான நிபந்தனையை அமமுக முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!