| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தமுஎகச சார்பில் ‘தொல்மரபு நடைபயணம்’..! தேனி பகுதியில் வரலாற்றுத் தேடல்..!

by Vignesh Perumal on | 2026-01-03 06:08 PM

Share:


தமுஎகச சார்பில் ‘தொல்மரபு நடைபயணம்’..! தேனி பகுதியில் வரலாற்றுத் தேடல்..!

தேனி மாவட்டத்தின் பழமையான வரலாற்றையும், கலை மரபுகளையும் இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) தேனி வட்டாரக் கிளை சார்பில் இன்று (சனிக்கிழமை) சிறப்பான 'தொல்மரபு நடைபயணம்' நடைபெற்றது.இன்று காலை 10:30 மணியளவில் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளத்தீஸ்வரர் கோயிலில் இந்த நடைபயணம் தொடங்கியது.தமுஎகச மாவட்டச் செயலாளர் ம. காமுத்துரை இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். தொல்லியல் ஆய்வாளர் மாணிக்கராஜ் அவர்கள் பங்கேற்று, காளத்தீஸ்வரர் கோயிலின் தனித்துவமான கட்டிடக்கலை, அங்குள்ள அரிய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் செய்திகள் குறித்து விரிவான வகுப்பு எடுத்தார்.கோயிலின் தூண்களில் மறைந்துள்ள வரலாற்றுத் தரவுகள் மற்றும் அக்கால சமூக வாழ்க்கை முறையை ஆய்வாளர் விளக்கியது பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முற்பகல் 11:00 மணியளவில், ஒரு சிறிய இடைவேளையாக தேநீருடன் கூடிய வரலாற்று உரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் தாங்கள் கண்டறிந்த வரலாற்றுத் தகவல்கள் குறித்து ஆய்வாளரிடம் கலந்துரையாடினர்.அதனைத் தொடர்ந்து, இப்பயணம் அருகிலுள்ள சமணப் பள்ளிக்கு சென்றடைந்தது. அங்கு, பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் மற்றும் அவற்றின் உருவ அமைப்பு குறித்து விளக்கப்பட்டது. இப்பகுதியில் சமண சமயம் தழைத்தோங்கியதற்கான சான்றுகளாக விளங்கும் கல்வெட்டுச் செய்திகள் மற்றும் சமணத் துறவிகள் வாழ்ந்த படுக்கைகள் குறித்து ஆய்வாளர் மாணிக்கராஜ் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கமாக, மறைந்து வரும் நம் மண்ணின் தொல் எச்சங்களைப் பாதுகாப்பதும், கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் வழியாக உண்மையான வரலாற்றை மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்களிடையே கொண்டு சேர்ப்பதும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் தமுஎகச நிர்வாகிகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் பகுதியின் தொன்மையான வரலாற்றுப் பக்கங்களை இந்த நடைபயணம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment