by Vignesh Perumal on | 2025-12-27 03:48 PM
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்த நபரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராம்பூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வருபவர் ஜான் அருளப்பன். இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த வேலையைச் செய்து கொடுக்க ஜான் அருளப்பன் ரூ.6,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
அரசு சேவையைப் பெற லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார், வி.ஏ.ஓ-வை கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டம் தீட்டினர். அதன்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர்.
இன்று ஜான் அருளப்பனிடம் புகார்தாரர் ரூ.6,000 பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ரசாயனம் தடவிய நோட்டுகளைப் பெற்றதால் அவரது கைகளைச் சோதித்தபோது லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜான் அருளப்பனைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ ஜான் அருளப்பனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பணியாற்றி வந்த அலுவலகத்தில் இருந்த கோப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். பட்டா மாறுதல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே அரசு அதிகாரி லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!