by Vignesh Perumal on | 2025-12-27 03:33 PM
சென்னை பூந்தமல்லி அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில், சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை, சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான சந்தோஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரும் இன்று தங்களது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
இளைஞர்கள் இருவரும் பைக்கில் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாகப் பைக் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக் லாரியின் அடியில் சிக்கிச் சிதைந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், ஹெல்மெட் அணியாமல் செல்வதும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது எனப் போலீசார் கவலை தெரிவித்துள்ளனர். அதிவேகப் பயணத்தைத் தவிர்த்து சாலை விதிகளை மதிக்குமாறு பொதுமக்களுக்குப் போலீசார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
நண்பர்கள் இருவர் ஒரே நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் சென்னீர்குப்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!