| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனியில் ரூ.7.40 கோடியில் நவீனமயமாகும் கண்மாய்....! எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்...!

by Vignesh Perumal on | 2025-12-26 03:14 PM

Share:


தேனியில் ரூ.7.40 கோடியில் நவீனமயமாகும் கண்மாய்....! எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்...!

தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்தும் பணிகளைத் தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இன்று முறைப்படி தொடங்கி வைத்தனர்.

தேனி மாவட்டத்தின் தலைநகராகத் தேனி நகர் விளங்கி வந்தாலும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவோ போதிய வசதிகள் கொண்ட பூங்காக்கள் இல்லை என்பது நீண்டகாலக் குறையாக இருந்தது. இதையடுத்து, மீறுசமுத்திரம் கண்மாயை நவீனப்படுத்தி அங்கு பூங்கா மற்றும் நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.7.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார்.

இதனடிப்படையில், நீர்வளத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நவீனப்படுத்தும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதி ஒரு முழுமையான சுற்றுலாத் தலம் போல மாற்றப்பட உள்ளது. கண்மாய் கரையை பலப்படுத்துதல், தடுப்புச் சுவர் கட்டுதல், நவீன நுழைவுவாயில், அலுவலகக் கட்டடம், பாதுகாவலர் அறை மற்றும் பாலம் அமைத்தல்.

பொதுமக்களுக்கான நடைபயிற்சி பாதை, வண்ணமயமான பூங்கா, படகுகள் நிறுத்துமிடம், உணவுக்கூடம் மற்றும் அமரும் மேடைகள்.

ஆகாய தாமரைகளை அகற்றி நீர்நிலையைச் சுத்தப்படுத்துதல், அதிகளவில் மரங்கள் நடுதல் மற்றும் பறவைகள் வந்து தங்குவதற்கு ஏதுவாக பறவைகள் தீவு (Bird Island) அமைத்தல்.

நவீன கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல்.

இந்த நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், நீர்வளத்துறை (மஞ்சாறு வடிநிலக்கோட்டம்) செயற்பொறியாளர் சரவணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, தேனி நகரின் அடையாளமாகவும், முக்கியப் பொழுதுபோக்கு மையமாகவும் மீறுசமுத்திரம் கண்மாய் உருவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment