by admin on | 2025-12-20 06:30 PM
4-ஆவது புத்தகத் திருவிழாவில் மாணவர்கள், இளைஞர்கள், புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., இன்று (20.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டுமென்ற நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டந்தோறும் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 4-ஆவது புத்தகத் திருவிழா நாளை (21.12.2025) முதல் 28.12.2025 வரை 8 நாட்களுக்கு தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில் தொடக்கநாள் முதல் இறுதிநாள் வரை புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நல்ஆளுமைகளின் சிறப்புரைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
அதனடிப்படையில், 4-ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், புத்தக அரங்குகள், துறைகளுக்கான அரங்குகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப்பொருட்கள் இடம்பெறும் அரங்குகள் மற்றும் விழா மேடை, உணவுப்பொருள் விற்பனைக் கூடங்கள், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதையும், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இதர பணிகள் குறித்தும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், உதவி ஆணையர் (கலால்) திரு.பஞ்சாபகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.முகமது அலி ஜின்னா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.நல்லதம்பி, துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்துக்குமார், நகர்நல அலுவலர் திருமதி கவிப்பிரியா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!