by Vignesh Perumal on | 2025-12-14 04:43 PM
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெண் காவலர் ஒருவர், மற்றொரு காவல் நிலைய உதவி ஆய்வாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்தோணி மாதா (30) என்ற பெண் காவலர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
உதவி ஆய்வாளர் அந்தோணி மாதா, கணவர் யோவானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவர் மீஞ்சூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த நேற்றிரவு, ரஞ்சித்குமாரை தனது வீட்டிற்கு வருமாறு அந்தோணி மாதா அழைத்துள்ளார். ஆனால், ரஞ்சித்குமார் வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த அந்தோணி மாதா, உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமாருக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டிய அந்தோணி மாதா, வீடியோ கால் இணைப்பில் இருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அம்பத்தூர் காவல் நிலையப் போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை காவல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு....
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!