by Vignesh Perumal on | 2025-12-01 12:13 PM
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக இன்று அதிகாலை வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், இவர்கள் சென்ற வேனும், புதுச்சேரியை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்தக் கோர விபத்தில், வேனில் பயணித்தவர்களில் அம்முலு (வயது 24) மற்றும் உமா (வயது 40) ஆகிய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பலத்த காயமடைந்த மற்றவர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்:
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்