| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

திருப்பூரில் ஆலைக்கு சீல்...! ரூ.1.26 கோடி மோசடியில் 4 பேர் கைது...!

by Vignesh Perumal on | 2025-11-16 01:53 PM

Share:


திருப்பூரில் ஆலைக்கு சீல்...! ரூ.1.26 கோடி மோசடியில் 4 பேர் கைது...!

திருப்பூரில் இயங்கி வந்த ஒரு கலப்பட நெய் தயாரிப்பு ஆலைக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர். புகழ்பெற்ற கர்நாடக நெய் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கலந்து போலியான நெய்யைத் தயாரித்து, 2 ஆண்டுகளில் ரூ.1.26 கோடி லாபம் ஈட்டியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பி.என்.ரோடு, குமாரசாமி நகர் பகுதியில் இயங்கி வந்த ஆலை. பெங்களூரைச் சேர்ந்த மகேந்திரா என்பவர். தனது ஆலை மூலம் கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நெய் கம்பெனி ஒன்றின் பெயரையும் முத்திரையையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

பாமாயில், டால்டா மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி, அவற்றைச் சில வேதிப் பொருட்களுடன் கலந்து போலியான நெய்யைத் தயாரித்துள்ளார். இந்த கலப்பட நெய்யை அசல் நெய்யின் விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த மகேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள், இதன் மூலம் ரூ.1 கோடியே 26 லட்சம் வரை சட்டவிரோதமாக லாபம் ஈட்டியுள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கலப்பட நெய் ஆலை குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அவர்கள் திடீரென அந்த ஆலைக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, கலப்படம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள், போலியான நெய் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் பாக்கெட்டுகளுக்கு முத்திரையிடப் பயன்படும் போலி ஸ்டிக்கர்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மோசடியில் ஈடுபட்ட ஆலையின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் அவருடன் செயல்பட்ட தீபக், முனிராஜ், அபி அர்ஸ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உணவுப் பாதுகாப்புத் தரமற்ற பொருட்கள் தயாரித்த குற்றத்திற்காக, அந்த ஆலைக்கு அதிகாரிகள் நிரந்தரமாக சீல் வைத்தனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இந்த மோசடி தொடர்பாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இந்தக் கலப்பட நெய்யை வாங்கியவர்கள் யார், இந்த நெய் எங்கு எங்கு விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment