by Vignesh Perumal on | 2025-11-03 02:30 PM
கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி, கரூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் பங்கேற்றப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 306 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை வளையத்தை சி.பி.ஐ. விரிவுபடுத்தியுள்ளது.
கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கூட்டத்தை வீடியோ எடுத்த போலீஸ் ஒளிப்பதிவாளர் உட்பட 50-க்கும் மேற்பட்டோருக்குச் சம்மன் அனுப்பி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தற்போது விசாரணை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கடைகள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், செல்போன் கடை வைத்திருப்பவர்கள், நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பத்தினர், உறவினர்கள், காயமடைந்தவர்கள் என மொத்தம் 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இவர்களுக்குச் சம்மன் அனுப்பி, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களைச் சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்று இன்று (நவம்பர் 3) சென்னை, பனையூரில் உள்ள தமிழ்நாடு வெற்றி கழகத்தின் (த.வெ.க.) அலுவலகத்திற்கு வருகை தந்தது.
கூட்ட நெரிசலின்போது பயன்படுத்தப்பட்ட, த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விஜயின் பிரசார வாகனத்தை (பேருந்து) ஆய்வு செய்வதே சி.பி.ஐ. குழுவின் நோக்கம் ஆகும். பிரசார வாகனத்தின் உயரம், நீளம் போன்ற அளவீடுகளை எடுப்பதுடன், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கூட்ட நெரிசலுக்குக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு அம்சங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சி.பி.ஐ. அதிகாரிகள் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தகவலை அறிந்த தலைவர் விஜய் அவர்கள், நீலாங்கரையில் இருந்து உடனடியாகப் புறப்பட்டுப் பனையூர் அலுவலகத்திற்கு வந்தார். இதனால், பனையூர் அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு