by Vignesh Perumal on | 2025-10-14 07:56 PM
திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துப் பணம் பறிக்க முயன்ற இரண்டு இளைஞர்களை நகர் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த திண்டுக்கல், YMR-பட்டியைச் சேர்ந்த இளமுருகன் (26), மற்றும் நல்லாம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் (26) ஆகிய இரண்டு பேரும், தர்மராஜனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். கொலை மிரட்டல் விடுத்து, உயிர் பயத்தை ஏற்படுத்தி, அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
இது தொடர்பாக, தர்மராஜ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீஸார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இளமுருகன் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் நகரில் பகல் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....