by Vignesh Perumal on | 2025-10-07 02:13 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியார் பொறியியல் கல்லூரி ஓட்டுநர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாச்சியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
இன்று, பழனிச்சாமி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற ரயில் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, பழனிச்சாமி கவனக்குறைவாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....