by Vignesh Perumal on | 2025-09-29 11:03 AM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த துயரத்தை ஒட்டி, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, தன் மனவேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மரணங்கள் தனக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
"என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வயதில் தனது தாயின் தற்கொலையில் மரணத்தின் வலியை உணர்ந்ததாகக் கூறியுள்ள ஆதவ் அர்ஜுனா, "அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் ஒரு சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் தனது மனம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்தக் குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், துயரமும், துக்கமும் மட்டுமே தன் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த உறவுகளுக்கு ஆறுதலாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் இறுதியில், 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்!' என்ற முழக்கத்துடன் அவர் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்