| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் திருவாரூர்

ஒரு கோடி பனை திட்டம்...! 10,000 பனை விதைகள்...! அசத்திய பள்ளி மாணவர்கள்...!

by Vignesh Perumal on | 2025-09-19 08:28 PM

Share:


ஒரு கோடி பனை திட்டம்...! 10,000 பனை விதைகள்...! அசத்திய பள்ளி மாணவர்கள்...!

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் முயற்சியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி, திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தாங்களாகவே சேகரித்த 10,000 பனை விதைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

வேலுடையார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை, நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் இதர மாணவர்கள் இணைந்து, இந்த ஒரு கோடி பனை விதைகள் திட்டத்திற்காகத் தீவிரமாகப் பனை விதைகளைச் சேகரித்தனர். இவர்களது முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, பள்ளியின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோ. வெங்கடேஸ்வரன் ஆகியோரிடம், மாணவர்கள் சேகரித்த 10,000 பனை விதைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் டி. சிவரஞ்சனி, பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அகிலன், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கே. இளங்கோவன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம். கணேசன், மற்றும் பனை விதை சேகரிப்பில் முக்கியப் பங்காற்றிய முதுகலை ஆசிரியர் ஜி. ராஜேந்தர் மற்றும் சமூக அறிவியல் மன்றப் பொறுப்பாளர் என். ராஜு ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த 10,000 பனை விதைகள், இன்று முதல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் கரைப் பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்கள் மற்றும் உள்வாய்க்கால்களின் கரைப் பகுதிகளில் பதியம் செய்யப்பட உள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், நிலத்தடி நீரை மேம்படுத்துவதிலும் பனை மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பனை விதைகளைச் சேகரித்து ஒப்படைத்தது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.



செய்தி - இளங்கோவன் திருவாரூர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment