by Vignesh Perumal on | 2025-09-15 02:42 PM
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்றதாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, தி.மு.க. கவுன்சிலரின் மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பின்போது, எடப்பாடி பகுதியில் போதை மாத்திரைகளை விற்றுக்கொண்டிருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களை விசாரித்ததில், அவர்கள், சுரபி (26), விமல் (27), சுகேஷ் (23), சரண் (25) மற்றும் ஒரு தி.மு.க. கவுன்சிலரின் மகன் என்பது தெரியவந்தது.
இவர்கள் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு........