| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் கோயம்புத்தூர்

அதிகாலையில் ஊருக்குள் திக்திக்...! பதறிப் போன மக்கள்...!

by Vignesh Perumal on | 2025-08-11 03:21 PM

Share:


அதிகாலையில் ஊருக்குள் திக்திக்...! பதறிப் போன மக்கள்...!

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர் அருகே உள்ள ரேஷன் கடையை காட்டு யானைகள் சூறையாடிச் சென்றன. இதில், கடைக்குள் இருந்த அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள் சேதமடைந்தன.

இன்று அதிகாலை, அறிவொளி நகர் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், அங்குள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டன. ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த யானைகள், அங்கிருந்த அரிசி, கோதுமை மற்றும் பருப்பு மூட்டைகளை இழுத்துச் சேதப்படுத்தின.

யானைகளின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதால், யானைகள் அங்கிருந்து சிறிது தூரம் சென்றன. இருப்பினும், ரேஷன் கடையைச் சுற்றி யானைகள் நடமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டினர்.

சமீபகாலமாக, மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து உணவு தேடி கிராமங்களுக்குள் யானைகள் நுழைவது அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. யானைகள் கிராமத்திற்குள் வருவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment