by Vignesh Perumal on | 2025-08-09 01:12 PM
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பெரிய கொள்ளுபட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகேயுள்ள பெரிய கொள்ளுபட்டி கிராமத்தில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று (ஆகஸ்ட் 9, 2025) மதியம், அந்த வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் குறித்து விசாரித்து வருவதுடன், பட்டாசுகள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு விபத்து நடந்த இடத்தில், பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த வீட்டிற்கு பட்டாசு தயாரிப்புக்கான உரிமம் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்