by Vignesh Perumal on | 2025-08-08 01:37 PM
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) தி.மு.க.விற்கும் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. இது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியுள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
"திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் ஐ.பெரியசாமி அவர்கள் வெற்றி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கி தவெக தலைவர் விஜய் வெற்றி வாகை சூட வருக வெல்க" என்று தவெக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தவெக-வின் போஸ்டர்களுக்குப் பதிலடியாக, தி.மு.க. இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டுகிறேன் it's true Bro இல்லேன்னா நீங்க? BRO? It is very Wrong Bro" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், அமைச்சராக இருக்கும் இ.பெரியசாமிக்கு எதிராக தவெக களமிறங்கியுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்த போஸ்டர் யுத்தம், தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது வரவிருக்கும் தேர்தலுக்கான பிரசாரத்தின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்