by Vignesh Perumal on | 2025-08-08 01:17 PM
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலைக் கொலை செய்த வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மணிகண்டனின் உடலை, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் நாயக்கனூர் கிராமத்துக்குள் அனுமதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, குடிமங்கலம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல், குற்றவாளிகளை விசாரிக்கச் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் ஈடுபட்ட மணிகண்டன், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் நாயக்கனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்ல அவரது தாயார் ஏற்பாடுகள் செய்தார். ஆனால், மணிகண்டன் கொலை குற்றவாளி என்பதால், அவரது உடலை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என நாயக்கனூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உடலை ஊருக்கு வெளியே உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
பின்னர், கிராம மக்கள் ஒன்றுகூடி விவாதித்து, மணிகண்டனின் உடலை திருப்பூரிலேயே அடக்கம் செய்யலாம் என முடிவெடுத்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மணிகண்டனின் உடல் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு குற்றவாளியின் உடலை சொந்த ஊரே புறக்கணித்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்