by Vignesh Perumal on | 2025-08-07 03:30 PM
திண்டுக்கல், நத்தம் ரோடு, பொன்னகரம் அரவிந்த்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், குர்ஷித் பேகம் (60) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நத்தம் ரோடு, பொன்னகரம் பகுதியில் உள்ள அரவிந்த்நகர் பகுதியில் வசித்து வந்த குர்ஷித் பேகம் வீட்டில் இன்று திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று பரவியதால் மூதாட்டி சிக்கிக்கொண்டார்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைத்து, குர்ஷித் பேகத்தின் உடலை மீட்டனர். பின்னர், உடலைத் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.