by Vignesh Perumal on | 2025-08-07 03:22 PM
"ஐந்தாம் தமிழ்ச் சங்கம்" என்ற யூடியூப் சேனலின் நிறுவனர் பாண்டியன் என்பவர், நாயுடு சமூகத்தையும், பெண்களையும் தவறாகச் சித்திரித்துப் பேசியதைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட அனைத்து நாயுடு - நாயக்கர் சங்கங்கள் சார்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
சமீபத்தில், "ஐந்தாம் தமிழ்ச் சங்கம்" என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பாண்டியன், நாயுடு சமூகம் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சால், அந்த சமூக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது.
இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்ட அனைத்து நாயுடு - நாயக்கர் சங்கங்கள், இயக்கங்கள் மற்றும் பேரவைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரது யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11, 2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்