by Vignesh Perumal on | 2025-08-04 02:13 PM
தமிழக டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதால், புதிய டிஜிபி-யை நியமிக்க வேண்டும் என்றும், இந்த நியமனம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி நடைபெற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது நிர்வாக ரீதியிலான விவகாரம் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், புதிய டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவு, தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்