by Vignesh Perumal on | 2025-07-30 10:58 AM
திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மூன்றாவது நாளாகவும் மறுத்து வருகின்றனர். நேற்று இரவு அவரது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் காவல் துறை நடத்திய நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என கவினின் உறவினர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
திருநெல்வேலியில் இளைஞர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இது ஒரு ஆணவக்கொலை எனப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொலையில், சுர்ஜித் என்ற மற்றொரு இளைஞரின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோரின் தூண்டுதல் இருப்பதாகக் கவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகக் கவின் உடலை வாங்க மறுத்து வந்த உறவினர்கள், சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியைக் கைது செய்து விசாரிக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என அறிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில், நேற்று இரவு கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களுடன் காவல் துறை அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி இருவரும் ஏற்கனவே பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
எனினும், பணியிடை நீக்கம் மட்டும் போதாது, இருவரையும் உடனடியாகக் கைது செய்து கொலை வழக்கில் விசாரிக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என கவினின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
கவினின் உறவினர்களின் தொடர் கோரிக்கையால், திருநெல்வேலியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !
புலிகள் காப்பகம் - மீட்டெடுக்கும் பணி தீவிரம் !
முதலையை பிடிக்க நடவடிக்கை - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல் !