by Vignesh Perumal on | 2025-07-26 02:50 PM
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் எதிரே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் கார் மோதிய கோர விபத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை, திண்டுக்கல் குரும்பபட்டியைச் சேர்ந்த 58 வயதான பாண்டியன் என்பவர் மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற லாரியை, அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் எதிரே நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த நித்தியா என்பவர், வாடகை காரில் பழனி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, நித்தியா பயணித்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த நித்தியா, சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார், நித்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம், ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.