by Vignesh Perumal on | 2025-07-20 10:27 AM
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் - எரியோடு சாலையில் உள்ள முள்ளாம்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதிக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரி இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எரியோடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
கடந்த சில நாட்களாக முள்ளாம்பட்டி கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பொதுமக்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று காலை அய்யலூர் - எரியோடு சாலையில் திரண்டு காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த எரியோடு போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் உறுதியளித்தனர்.
போலீசாரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.