by Vignesh Perumal on | 2025-07-12 12:10 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மதுரையைச் சேர்ந்த ரவுடி ஒருவர் கழுத்தை அறுத்து தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவருடன் வந்த மேலும் 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த சிவமணி (35), அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 5 பேர் கொண்ட ரவுடி கும்பல், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஐவரும் கொடைக்கானல் செல்வதற்காக ஒரு ஸ்கார்பியோ காரில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பயணத்தின்போது, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மதுரை சாலை, பெட்ரோல் பங்க் அருகே காரில் வந்துகொண்டிருந்த இவர்களுக்குள் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சிவமணியின் கழுத்தை அறுத்து, தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிவமணியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையில் ஈடுபட்ட அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கொலைக்கான சரியான காரணம் மற்றும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து வத்தலகுண்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.