by Vignesh Perumal on | 2025-07-10 10:48 AM
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரை அடுத்த கன்னிமார் நகர் அருகே, மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 10) காலை நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அம்மையநாயக்கனூர் அருகேயுள்ள கன்னிமார் நகர் பகுதியில், இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளப்பட்டி, தேவர் நகரைச் சேர்ந்த சின்னகோனார் என்பவர், சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்தவுடன், அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த சின்னகோனாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் ஓட்டுநரின் கவனக்குறைவா, இருசக்கர வாகன ஓட்டியின் தவறுதலா அல்லது அதிவேகமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சாலைப் பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.