by Vignesh Perumal on | 2025-07-09 09:04 PM
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் துறை விசாரணையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி (நாதக) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, "தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல" எனச் சரமாரிக் கேள்வி எழுப்பியது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் காவல் துறை விசாரணையின்போது ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காவல் மரணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் காவல்துறையிடம் அனுமதி கோரி நாதக தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், "தற்போது சிவகங்கை கண்டதேவி கோவில் தேரோட்ட பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போராட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்க இயலாது" என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், "தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல" என்று கருத்துத் தெரிவித்தனர். மேலும், "ஒரு அரசியல் கட்சிக்கு போராட, மக்களுக்காகக் குரல் கொடுக்க உரிமை உண்டு" என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னர், போராட்டம் நடத்த புதிதாக மனு அளிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை காவல்துறை உரிய முறையில் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, ஒருபுறம் போராட்டத்திற்கான உரிமையை நிலைநாட்டுவதாகவும், மறுபுறம் போராட்டங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு....
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !
புலிகள் காப்பகம் - மீட்டெடுக்கும் பணி தீவிரம் !
முதலையை பிடிக்க நடவடிக்கை - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல் !