by Vignesh Perumal on | 2025-07-07 12:39 PM
கரூர் திருமாநிலையூர் பகுதியில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஜூலை 9-ம் தேதி புதன்கிழமை திறந்து வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார் என்று கரூர் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளைச் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 9-ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையின்போது, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கரூர் புதிய பேருந்து நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார். அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்குவார்.
நிறைவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் துணை முதல்வர் பங்கேற்பார். திமுக சார்பில் நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்.
கரூர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்தப் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதன் மூலம், கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணிகளுக்கு நவீன வசதிகள் கிடைக்கும்" என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த வருகை, கரூர் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.