| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

அரிவாள் வெட்டு...! பொதுமக்கள் சாலை மறியல்..! பலத்த போலீஸ் பாதுகாப்பு...!

by Vignesh Perumal on | 2025-07-03 12:09 PM

Share:


அரிவாள் வெட்டு...! பொதுமக்கள் சாலை மறியல்..! பலத்த போலீஸ் பாதுகாப்பு...!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மீனாட்சிபுரம் கிராம மக்கள் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மதன் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று (ஜூலை 3) எரியோடு அதிமுக அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத சிலர் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தத் துணிகரமான அரிவாள் வெட்டு சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எரியோடு அருகே உள்ள ஒரு மதுபானக் கடையில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக எரியோடு போலீசார் சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தின் முன்விரோதம் காரணமாகவே இன்று அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment