by Satheesh on | 2025-07-01 06:01 PM
திருப்பூர்: கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக வாட்ஸ்அப்பில் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு, காரில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக கோட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாக ரிதன்யா தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ பதிவில், “நான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் திருமண வாழ்க்கைதான். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர்தான் தற்கொலைக்கு காரணம்” என்று தெரிவித்திருந்தார். அவிநாசி அரசு மருத்துமனையில் நேற்று முன்தினம் ரிதன்யாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ரிதன்யாவின் உறவினர்கள் முற்றுகையிட்டு, தாக்க முயன்றனர். அவர்களை போலீஸார் மீட்டு, அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இந்நிலையில், ரிதன்யாவை துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக சேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்தனர். நகை கேட்டு துன்புறுத்தல்... ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறும்போது, “பாரம்பரியக் குடும்பம் என நம்பி பெண்ணைக் கொடுத்து ஏமாந்துவிட்டோம். திருமணமான 15 நாளில் ரிதன்யா எங்கள் வீட்டுக்கு வந்து கண்ணீர் விட்டு அழுதார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். திருமணத்தின்போது கணக்கின்றி நகை போட்டும், இன்னும் நகை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். என் மகளுக்கு நிகழ்ந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது. ரிதன்யா இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.திருமணமான 3 மாதத்தில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதால், திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் இதுகுறித்து விசாரித்து வருகிறார். அவர் கூறும்போது, “இளம்பெண் ரிதன்யா மரணம் தொடர்பாக பெண் வீட்டார் தரப்பிலும், போலீஸார் தரப்பிலும் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் விசாரிக்கப்படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்படும்” என்றார்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார் , பெரியகுளம். தேனி.