by Vignesh Perumal on | 2025-07-01 01:22 PM
சென்னையில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகளை வைத்திருக்கும் கட்டடங்களுக்கு அபராதம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டடங்களின் வகையைப் பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அல்லது பொது கழிவுநீர் இணைப்புடன் இணையாமல், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்கள், சாலைகள், அல்லது நீர்நிலைகளில் விடப்படுகின்றன. இது நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கும், சுகாதாரச் சீர்கேட்டிற்கும், நீர்நிலைகள் மாசுபடுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவே, சென்னை மாநகராட்சி அபராத தொகையை கணிசமாக உயர்த்தியுள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உயர்த்தப்பட்ட அபராதத் தொகையில் குறிப்பிட்டுள்ளதாவது: "சாதாரண குடியிருப்பு கட்டடங்கள் ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்வு. சாதாரண வணிக கட்டடங்கள் ரூ.2,500-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு. சிறப்பு குடியிருப்பு கட்டடங்கள் ரூ.5,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்வு. சிறப்பு வணிக கட்டடங்கள் ரூ.10,000-ல் இருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்வு. அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் ரூ.20,000-ல் இருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்வு. அடுக்குமாடி வணிக கட்டடங்கள் ரூ.50,000-ல் இருந்து ரூ.5 லட்சம் ஆக உயர்வு.
இந்த அபராத உயர்வு, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளைத் தடுப்பதோடு, பொது கழிவுநீர் அமைப்புகளை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டவிரோத இணைப்புகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.