by Vignesh Perumal on | 2025-06-21 05:06 PM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு மகள்கள் என மூன்று பேரை நிலக்கோட்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில், நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சத்திய பிரபா தலைமையில், சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி, தெற்கு தெரு பகுதியில் சிலர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குறிப்பிட்ட வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விற்பனையில், பாண்டியம்மாள் (50) என்ற தாய் மற்றும் அவரது மகள்களான மல்லிகா (31), பிரியா (27) ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது, இதன் பின்னணியில் வேறு பெரிய அளவிலான நெட்வொர்க் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல்கள் தெரிந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!
ஜீவனாம்ச வழக்கு - கணவன் கேட்ட ஒரே கேள்வி ! ஷாக்கான நீதிபதி !!
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!
புதிய கூட்டணிக்கு வியூகம் - தமிழக அரசியலில் பரபரப்பு ! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !!
தமிழகத்தில் பதவியேற்பு...! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு...!